

மதுரை,
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை திறம்பட செயல்படவில்லை என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-
"இளைஞர்கள் இன்று அதிகமாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். சில நேரங்களில் நவீன தொழில்நுட்பத்தை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்.
அதனை சைபர் கிரைம், உளவுத்துறை மூலம் தடுப்பதற்கு அரசாங்கம் தான் முனைப்பு காட்ட வேண்டும். அந்த முனைப்பை இன்று இருக்கும் அரசாங்கம் காட்ட முயலவில்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது தகவல் தொழில்நுட்பத்துறை மிகச்சிறந்த துறையாக சீரமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.