எய்ம்ஸ் திட்டம் அறிவித்து 7 ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை - மு.க.ஸ்டாலின்

எய்ம்ஸ் திட்டம் அறிவித்து 7 ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் திட்டம் அறிவித்து 7 ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை - மு.க.ஸ்டாலின்
Published on

மதுரை,

எய்ம்ஸ் திட்டம் அறிவித்து 7 ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடையில் திமுக சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், கருணாநிதி தமிழ் சமுதாயத்தையே வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு பிடித்த மதுரை மண்ணில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். பெருமைப்படுகிறேன். அதற்கு காரணம் கருணாநிதி சிலையை திறந்து வைத்ததுதான். நமக்கு ஊக்கமாக, உயிராக இருந்தவர் இன்று சிலையாக கருணாநிதி இருக்கிறார்.

மதுரை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றியது, உயர்நீதிமன்றம் கிளை அமைக்க அடித்தளமிட்டவர் கருணாநிதி. அதுபோல், மதுரையில் ஏராளமான மேம்பாலங்கள், வைகை ஆறு மேம்பாலங்கள், தமிழ் அறிஞர்களுக்கு மணிமண்டபங்கள், மாட்டுத்தாவணி பஸ்நிலையம், மதுரை சென்டரல் காய்கறி மார்க்கெட், மதுரை காவேரி, மதுரை விமான நிலையத்தை ரூ.120 கோடி ஒதுக்கி சர்வதேச நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுத்தது மற்றும் வைகை, காவேரி கூட்டுக்கடிநீர் திட்டங்கள் போன்றவை திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவை. இதுபோல ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் இன்னும் மதுரைக்கு வர காத்திருக்கிறது.

இதுபோல் அதிமுகவினர் எதுவும் மதுரைக்கு செய்ததாக சொல்ல முடியுமா. 2014ம் ஆண்டு மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கான 'எய்ம்ஸ்' மருத்துவமனை அறிவித்தது. பிரதமர் மதுரைக்கே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் திட்டம் அறிவித்து 7 ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், அஸ்ஸாம், இமாச்சலபிரதேஷ், போன்ற நாட்டின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக பல நூறு கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் ரூ.12 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது. கேட்டால் ஜப்பான் நாட்டு நிறுவனம் நிதி ஒதுக்கியதும் மதுரையில் பணிகள் நடக்கும் என்கிறார்கள். மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா?. பாஜக ஆட்சியில் ஒரே ஓரு திட்டத்தை தமிழகத்திற்கு அறிவித்துக் விட்டு அதையும்நிறைவேற்றால் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். ஜப்பான் நிதி வழங்காவிட்டால் மதுரையில் எய்ம்ஸ் வராதா?.

மதுரையில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அந்தப் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைத்தால் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும், இதனால் திட்டம் தாமதமாகும் என்பதால் கமிஷன் எடுக்க முடியாது என்பதால் தேவையில்லாத இடங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களை நிறைவேற்றுகின்றனர். மதுரையில் பல்பு மாற்றுவதில் கூட ரூ.21 கோடி முறைகேடு நடந்துள்ளது.

தமிழகத்தில் 10 மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் நடக்கிறது. எந்த ஊரிலும் 'ஸ்மார்ட் சிட்டி' ஆலோசனைக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. குறிப்பிட்ட கால அளவில் இந்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ஸ்மார்ட்டாக ஊழல் செய்கிறார்கள். மதுரை மட்டுமில்லாது தமிழகத்தை மாற்றுவதற்கான கூட்டம்தான் இது. சட்டவிரோதச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். தமிழக அரசு, பழைய கட்டிடங்களை புதுப்பித்து மினி கிளினிக் என திறந்து வருகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் சரியாக வரைமுறை செய்யப்படாததால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த உடன் இதற்கு ஒரு நல்ல தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com