ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை: கீழடியில் இருந்துதான் இந்திய வரலாறு தொடங்கியது நிரூபணம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

“கீழடியில் இருந்துதான் இந்திய வரலாறு தொடங்கியது என்பது நிரூபணமாகி இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை: கீழடியில் இருந்துதான் இந்திய வரலாறு தொடங்கியது நிரூபணம் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Published on

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு செய்து ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. பழங்கால தமிழர்களின் நாகரிகம், கட்டுமானம், பொருளாதார நிலை, கல்வி அறிவு, தொழில் குறித்து அறிந்துகொள்ளும் சான்றாக கீழடியில் கிடைத்த பொருட்கள் அமைந்துள்ளன. இதில் 4-ம் கட்ட அகழாய்வின் போது எடுக்கப்பட்ட பொருட்களை ஆராய்ந்ததில் அவை கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரியவந்தன.

தமிழக அரசு கடந்த வாரம் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து கீழடி மீது உலகளாவிய வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை திரும்பி இருக்கிறது. கீழடியில் தற்போது நடைபெற்று வரும் 5-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட நாள்தோறும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். குறிப்பாக மாணவ-மாணவிகள், அதிகாரிகள், வெளிநாட்டினர் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள்.

இந்தநிலையில் கீழடி அகழாய்வு பணிகளை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கீழடி வந்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த அவர், பின்னர் காரில் கீழடி சென்றார். மு.க.ஸ்டாலின் வருவதை அறிந்ததும் அங்கு தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டனர்.

பகல் 11.40 மணி அளவில் கீழடி சென்ற ஸ்டாலின், அங்கு அகழாய்வுக்காக தோண்டப்பட்டு இருந்த குழிகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டார். ஒவ்வொரு குழியிலும் எந்தெந்த பொருட்கள் எடுக்கப்பட்டன? அதன் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச்சுவர், உறைகிணறு, வட்டச்சுவர், சுடுமண் குழாய், செற்கற்களால் ஆன தரைத்தளம், வட்ட பானை ஆகியவற்றையும் பார்வையிட்டார். அகழாய்வுக்காக குழிகள் தோண்டும் தொழிலாளர்களிடமும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சுமார் ஒரு மணி நேரம் கீழடி அகழாய்வு பணிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர்களின் வரலாற்று பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த கீழடி, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருப்பது பெருமைக்குரியது. கீழடியால் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பெருமை.

கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எவ்வாறு சிறப்புற்று வாழ்ந்துள்ளனர் என்பதை உலகிற்கு எடுத்துக்கூறும் விதமாக தங்கம் மற்றும் இரும்பு, ஓடுகளில் இருக்கக்கூடிய எழுத்துகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் சனவுலி மற்றும் குஜராத் மாநிலத்தில் அகழாய்வு நடந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோல் கீழடியையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, இங்கும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com