விஜய் பிரசாரத்துக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை - ஹேமமாலினி எம்.பி.

கூட்ட நெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை என பாஜக எம்.பி., ஹேமமாலினி கூறினார்.
விஜய் பிரசாரத்துக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை - ஹேமமாலினி எம்.பி.
Published on

கரூர்,

கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி விசாரிப்பதற்காக பாஜக சார்பில் எம்.பி.,யும் நடிகையுமான ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இன்று கரூருக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹேமமாலினி, கூறியதாவது;

கரூர் கூட்ட நெரிசலால் உயிரிழந்தது தொடர்பாக உண்மையை கண்டறிய தேசிய ஜனநாயக கூட்டணி விசாரணை குழு அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களிடம் பேசவுள்ளோம். உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறியவுள்ளோம்.

எப்படி இந்த இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது? பெரிய நடிகருக்கு, சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை. விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர். பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது. தவெகவினர் சிறிய இடம் கேட்டிருந்தாலும், அரசு அவர்களுக்கு பெரிய இடத்தை வழங்கியிருக்க வேண்டும்.

கூட்ட நெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com