

சென்னை,
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 7.50 மணியளவில் சென்னை புறப்பட்ட பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.35 மணிக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார்.
காலை 11 மணியளவில் சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி வந்து சேர்ந்தார். அவரை வரவேற்று அதிமுக, பாஜக சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ் தாய் வாழ்த்துடன் அரசு விழா தொடங்கியது.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது என்று புகழாரம் சூட்டினார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர், காவிரி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்த மாநிலமாக விளங்கி வருவதாகவும், நல்லாட்சியை வழங்குவதற்காக மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.