

சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விசிக அம்பேத்கர் திடல் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக பராமரிப்பு வேலைகள் நடைபெற்று அவை முடிவடைந்த நிலையில் அலுவலக பயன்பாட்டிற்கு புதிய சோபாக்கள் வாங்கப்பட்டது! ஆனால் சோபா குறித்து சமூக வலைதளங்களில் கிளம்பிய கிண்டல்கள் முட்டாள்தனமானது!
இதற்கும் தலைவர் விளக்கமளிக்க வேண்டிய தேவை தவிர்க்க இயலாதது வேதனை தருவது! தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதல்-அமைச்சர் விஜய் தலைவர் திருமாவளவனை சந்திக்க வரப்போகிறார் என்ற செய்திகள் பரவிய நேரத்தில் அந்தச் சோபாக்கள் அலுவலகத்திற்கு வந்தன.
இதனால் விஜய்க்கு அமர வைப்பதற்காகவே விசிக அலுவலகத்தில் ஸ்பெஷலாக சோபாக்கள் தயார் செய்யப்படுகின்றன என்று பலரும் கிண்டல் செய்தனர்! ஒரு கட்சியின் அலுவலகத்திற்குத் தேவையான பொருட்கள் (Furniture) வாங்குவது என்பது அவர்களின் நிர்வாகம் சார்ந்த விஷயம்.
ஆனால் அதை மற்றொரு நடிகரோ அல்லது அரசியல் தலைவரோ வரப்போகிறார்கள் என்பதோடு முடிச்சுப் போட்டு விஜய்க்காகத்தான் இதெல்லாம் நடக்கிறது என்று தரம் தாழ்த்தி பேசியது தரங்கெட்ட அரசியல்!!! எளிய மக்களுக்காக இயங்கும் ஒரு கட்சியின் அலுவலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை கூட அரசியல் உள்நோக்கத்துடன் கிண்டல் செய்வது முறையற்றது !!
அரசியல் களத்தில் ஒரு கட்சியின் செயல்பாடுகளை விட அவர்கள் அலுவலகத்திற்கு வாங்கும் பொருட்கள் கூட இவ்வளவு பெரிய விவாதத்திற்குள்ளாவது வியப்பாகவும் அதே சமயம் தரம் தாழ்ந்த விமர்சனமாகவும் உள்ளது!
கோடிக்கணக்கில் சொத்துக்களும் பல ஆடம்பர பங்களாக்களும் உள்ளவர்களை கேள்வி கேட்காத இச்சமூகம்
எளியவர்கள் சாதாரண ஒரு சோபா வாங்குறதையும் ஷூ போடுவதையும் கூட அரசியலாக பார்ப்பது வேடிக்கை! இது ஆரோக்கியமான அரசியல் அல்ல!
அப்படியே கழிப்பறையில் பக்கெட் விளக்குமாறு எல்லாத்தையும் கணக்கெடுத்துட்டு போங்க! அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதைக்கூட அரசியலாக்குவது அரசியல் நாகரீகம் அல்ல!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.