

சென்னை,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 20-ந்தேதி தமிழகத்திற்கு வருகை தந்து பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் அன்றைய தினம் ராகுல் காந்தியை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்திக்காதது பேசுபொருளானது.
இதனிடையே, தனக்கு சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். ஆனால், வருமான வரித்துறை தரப்பில் அவ்வாறு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சோதனை நடத்தப்பட்டது உண்மைதான் என செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது;-
“வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது என் கடமை. நான் தங்கியிருந்த இடம், அலுவலகங்களில் திடீர் சோதனை நடைபெற்றது உண்மைதான்.
கடந்த 20-ந்தேதி ராகுல் காந்தி தமிழகம் வந்த நிலையில், என்னை முடக்குவதற்காக திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது. நான் தங்கியிருந்த இடம், அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
நியாயம், ஜனநாயகம் மீதுள்ள நம்பிக்கையுடன் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் உறுதியாக உள்ளேன். சம்பவம் தொடர்பான ஆதாரங்களை ஏப்ரல் 24-ந்தேதி காலை 11 மணிக்கு சென்னையில் வெளியிடுவேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.