ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த மழை

வேலூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்த மழை
Published on

வேலூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனாலும் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் பகல் 12 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன.

அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது. அதன்பின்னர் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அவ்வவ்போது குளிர்ச்சியான காற்று வீசியது. மாலை 6 மணியளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இடி, மின்னல் காற்று இன்றி பெய்து கொண்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.

குடியிருப்புகளை சுற்றி...

இதனால் சாலையோரம், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாலையில் அலுவலக வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. சிலர் குடை பிடித்தபடியும், ரெயின்கோட் அணிந்தும் சென்றனர். இதேபோன்று காட்பாடியிலும் மழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டம், சாலை பணிகளுக்காக தோண்டப்பட்ட குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

சேண்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில் தெரு, கன்சால்பேட்டை, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது. அதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அவற்றை அங்கிருந்து அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com