கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமைய வேண்டும்; முதல்-அமைச்சர் உத்தரவு

கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி நடத்தப்படும் விழாக்கள், அவர் நிறைவேற்றி காட்டிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுவதாக அமைய வேண்டும்; முதல்-அமைச்சர் உத்தரவு
Published on

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

5 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவர் அவர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் அமர்ந்து அரிய வாதங்களை எடுத்து வைத்தவர். இந்திய நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதிகளை பலமுறை தேர்ந்தெடுத்து அவர்களை அந்தப் பொறுப்புகளில் அமர்த்தியவர் அவர்.

பிரதமர்களை பல்வேறு முறை உருவாக்கியவர். தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்ல, இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் கருணாநிதி இருந்தார். முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது கருணாநிதி, ''நான் முதல்-அமைச்சராக கோட்டையில் இருந்தாலும், அங்கிருந்தபடியே குடிசைகளைப் பற்றியே சிந்திப்பவன்'' என்றார்.

தன்னுடைய ஆட்சிக்கு, சமுதாய சீர்திருத்தத் தொண்டு, வளர்ச்சி பணிகள், சமதர்ம நோக்கு ஆகிய 3 இலக்கணம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இவை மூன்றும்தான் அவருடைய ஆட்சியின் இலக்கணமாக அமைந்திருந்தது. அந்த இலக்கணத்தின் அடிப்படையில்தான் ஆட்சி செலுத்தினார். அதனால் அனைத்து துறை களும் ஒருசேர வளர்ந்தன.

கருணாநிதி கால திட்டங்கள்

தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதி, மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம், மகளிருக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள், உழவர்களுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடி கடன் ரத்து, சென்னை தரமணியில் டைட்டல் பார்க்,

சென்னைக்கு மெட்ரோ ரெயில் திட்டம், சிப்காட், சிட்கோ, தொழில் வளாகங்கள் உருவாக்கம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது, நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள், அவசர ஆம்புலன்ஸ் 108 சேவை அறிமுகம், இலவச மருத்துவக் காப்பீடுத் திட்டம், மினி பஸ் சேவை, உழவர் சந்தைகள்,

ஏழை பெண்களுக்கு திருமண உதவி, கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள், பல்லாயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்காக 33 சதவீத இடஒதுக்கீடு, இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கியது,

நவீன தமிழகம்

மகளிர் சுய உதவிக் குழுக்கள், சமத்துவபுரங்கள் உருவாக்கம், இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு, உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தது, நுழைவுத் தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சேலம் உருக்காலை, சேலம் புதிய ரெயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்,

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நூலகம் ஆகியவை உருவாக்கம், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு திட்டம், ஏராளமான பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை - அறிவியல் கல்லூரிகள் உருவாக்கம் என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கருணாநிதி.

மக்களுக்கு நினைவூட்ட வேண்டும்

அப்படிப்பட்ட தலைவருக்குத்தான் அரசு சார்பில் நூற்றாண்டு கொண்டாடுவதற்கான ஆலோசனையில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். அவரை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு அவர் நிறைவேற்றிக் காட்டிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுபவையாக இந்த விழாக்கள் அமைய வேண்டும். மாதம் தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்தலாம்.

பெரிய பெரிய விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும். அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அது அமைய வேண்டும்.

நூற்றாண்டு விழா தலைமைக் குழு, விழாக் குழு, மலர்க்குழு, கண்காட்சிக்குழு போன்ற குழுக்கள் அமைச்சர்களை உள்ளடக்கி அமைக்கப்படும். இந்தக் குழுக்கள், தங்களுக்குள் அடிக்கடி கூடிப் பேசி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com