இன்று கடைசி நாள்: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம்?

வருமானவரி கணக்கு தாக்கல் இன்றைக்குள் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மாத ஊதியதாரர்கள் உள்ளிட்டோர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாள் ஆகும். தவறவிட்டால் டிச.31ம் தேதி வரை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம்.

கிராஷ் ஆகாது

தனிநபர்கள், வரி செலுத்தும் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் வரி தணிக்கை தேவைப்படாதோர் (ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 2) மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) வருமான வரி கணக்கை இன்றிரவு 12 மணிக்குள் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு இந்த தேதியை நீட்டிப்பதாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை என அறிவித்து விட்டது. மேலும் கடைசி நேரத்தில் எத்தனை பேர் ஐடிஆர் இணையதளத்தை பயன்படுத்தினாலும் இணையதளம் கிராஷ் ஆகாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அபராதம் எவ்வளவு..?

சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இதுவரை கணக்கு தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் ஒரே சமயத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறுபவர்கள், தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்கு அபராதம் விதிக்கப்படும். உங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள்

வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத நபர்கள் ஐடிஆர் 3 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கு ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். அதே போல கணக்கு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வணிகம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இரண்டு வழிமுறை

பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வருமான வரியை தாக்கல் செய்யலாம். புதிய வரி கணக்கு நடைமுறையில் பல்வேறு வரி சலுகைகள் கிடைக்காது என்றாலும் இதில் வருமான வரி உச்சவரம்பு அதிகம், ஆனால் பழைய வரி முறையில் பல்வேறு முதலீடுகளை குறிப்பிட்டு வரி சேமிப்பு செய்யலாம். உங்களுக்கு எது பொருத்தமானதோ அதனை பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இறுதியில் e- verification கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டது உறுதி செய்யப்படும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com