

சென்னை,
நடிகர் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக்குழு முன்பு ஆய்வில் உள்ளது. இந்தநிலையில், இந்த திரைப்படம் கடந்த மாதம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து படத்தை தயாரித்த கே.வி.என். புரெடெக்ஷன் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம், ரஜினி ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.இதையடுத்து, இந்த 9 பேர் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், ஜாமீன் கோரியுள்ள 9 பேரில், பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 9 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.