

சென்னை,
தேனியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது மரியாதையும் வீரவணக்கமும். இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவராக விளங்கிய பாரதி கண்ட புதுமைப்பெண். தனது திட்டங்கள் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா.
தன்னையே தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த தன்னலம் பாராத உன்னத தலைவர் ஜெயலலிதா. பிரிந்தவர்களை இணைத்து 1991-ல் ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினர். மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநிலத்தின் நிதியை கொண்டு நல திட்டங்களை செய்தவர் ஜெயலலிதா. கட்சிக்கு சோதனை வந்தபோது என்னிடம் முதல்-அமைச்சர் பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா இறந்த பிறகு என்னை கட்டாயப்படுத்தி முதல்-அமைச்சர் ஆக்கினார்கள். கட்டாயத்தின் பேரில் தான் நான் 3-வது முறையாக முதல்-அமைச்சர் ஆனேன்.
முதல்-அமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கு எந்த நம்பிக்கை துரோகமும் நான் செய்யவில்லை. ஜெயலலிதா தந்த முதல்-அமைச்சர் பணியை நிறைவாக முடித்த நிம்மதி, மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது. தமிழ்நட்டின் முதல்வராக 3-ம் முறையாக கட்டாயத்தின் பேரில் பொறுப்பேற்றேன்.
தன்னையே தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த தன்னலம் பாராத உன்னத தலைவி ஜெயலலிதா. சாதனை சரித்திரங்கள் பல படைத்து ஜெயலலிதாவின் புகழ் பூமி உள்ளவரை நிலைத்து இருக்கும்.
நடைபெற்ற 11 தேர்தலில் ஒரு தேர்தலில் கூட பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெறவில்லை. தற்போது அதே நிலைமைதான்.
என் உழைப்பை யாரும் இம்மியளவு கூட குற்றம் சொல்ல முடியாது. அதிமுகவுக்காக எவ்வளவோ பொறுத்திருக்கிறேன். இந்த பன்னீர்செல்வம் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள், நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, இறுதி நேரத்தில் அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி அழைத்தால் செல்வீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், மதியாதார் வாசலை மிதியாதே என ஒவையார் கூறியுள்ளார் என்றார்.