

சேலம்,
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கூட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமை தாங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார் அவர் பேசும் போது கூறியதாவது:-
முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை எவராலும் வீழ்த்த முடியாது. ஆட்சிக்கு திமுக வர எந்த தகுதியும் இல்லை என கூறினார்.
விழாவில் சபாநாயகர் தனபால் பேசும் போது எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பியவர்கள் யாரும் கெட்டதில்லை என்பதற்கு நானே உதாரணம் என கூறினார்.
விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ .பன்னீர் செல்வம் பேசியதாவது;-
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் மாவட்டம் என கூறும் அளவுக்கு விழா நடைபெற்று வருகிறது. திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுத்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில்தான் தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழகத்தில் தீயசக்திகளை அழிக்க மக்கள் பெற்றுள்ள ஒரே ஆயுதம் அதிமுக.
ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை முதலமைச்சர் பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். மக்களின் ஆதரவு கொண்ட ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. எத்தனை சித்துவேலைகளை செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது. தமிழக மக்களின் நலனைக் கெடுக்க சுயநலவாதிகள் முயற்சி செய்கின்றனர் என குற்றம்சாட்டினார்.