

சென்னை,
சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டது. தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர். தொடர்ந்து, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதற்காக மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஜெயலலிதா நினைவிடம் திறப்பையொட்டி சென்னை மெரீனாவில் கொரோனா அச்சத்தையும் மீறி, அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். காமராஜர் சாலையில் போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை இந்த தடை நீடிக்கும். எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.