ஜெயலலிதாவின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்று பிரசாரத்தின்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறினார்.
ஜெயலலிதாவின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
Published on

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, பிரசாரத்தை தொடங்கிய அவர் பல பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

திலகர் நகரில் பொதுமக்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு இல்லாதோருக்கு வீடு கட்டி தரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி வீடற்ற ஏழை-எளிய மக்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும். தமிழக மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். குறிப்பாக ஆர்.கே.நகரில் சிறப்பு கவனம் செலுத்தினார். தமிழக அரசு தற்போது ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆர்.கே.நகரிலும் அந்த திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இளம்பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். பிப்ரவரி 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளன்று, ஆர்.கே.நகர் தொகுதியில் மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

எனவே அ.தி.மு.க. வேட்பாளரான மதுசூதனனை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com