

புதுடெல்லி
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி, மறைந்த ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்ததாகவும் ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார் எனவும், ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், இந்த உண்மையை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும் தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரியும் வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்றும் அம்ருதா தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டை அணுகாமல் நேரடியாக நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை நாடியது ஏன் என கேள்வி எழுப்பினர்.
அம்ருதாவுக்காக ஆஜரான வக்கீல் பாதுகாப்பு காரணங்களுக்காக தாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக கூறினார். இதை தொடர்ந்து ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரி ஜெயலலிதா மகள் எனக்கூறும் அம்ருதா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை பிற்பகல் 2.15-க்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வருகிறது.