

சென்னை,
தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி பெற்ற பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்பிட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் இன்று தலைமை செயலகத்தில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பாரம்பரிய தொழிற்பிரிவுகளான பிட்டர், எலக்ட்ரீசியன், ஏ.சி. மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட தொழிற்பிரிவுகளிலும் தொழில் 4.0 தரத்திலான அட்வான்ஸ்டு சி.என்.சி., ரோபோடிக்ஸ், எலக்ட்ரிக் வெஹிக்கிள் போன்ற நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகின்றன.
2026-ம் கல்வியாண்டில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், இதுவரை 80 சதவீத இருக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. நேரடி சேர்க்கை 31.8.2026 வரை நடைபெறும். கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 95 சதவீதம் மாணவர்கள் உள்நாட்டு முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதல்களின்படி, சர்வதேச அளவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்திட வேண்டி முதற்கட்டமாக, தமிழ்நாட்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் துறைக்கான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளித்து, ஆட்டோமொபைல் சர்வீஸ் டெக்னீசியன்களாக ஜப்பான் நாட்டில் உள்ள எஹிமே-நிசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அமைத்துத் தர, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் எஹிமே–நிசான் நிறுவனம் ஆகியோரால் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னிலையில் இன்று (7.8.2026) தலைமைச் செயலகத்தில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
இதன்படி, பயிற்சி பெறும் தொழிற்பயிற்சி பட்டதாரிகளுக்கு ஆறு மாத கால ஜப்பானிய மொழிப் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை எஹிமே-நிசான் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஜப்பான் சென்றபின் மொழிப் பயிற்சி செலவுகள், ஆவணத் தயாரிப்பு உதவி, மருத்துவ பரிசோதனை கட்டணங்கள் மற்றும் விசா கட்டணங்கள் ஆகியவை அனைத்தும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த நிகழ்வின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசுச் செயலாளர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் டாக்டர் பழனி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், எஹிமே-நிசான் நிறுவன பிரதிநிதி செல்லப்பா ஸ்ரீராம் மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.