

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே கடந்த 2020-ம் ஆண்டு, பண பிரச்சினை காரணமாக சமூக ரெங்கபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 52) என்பவர், ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த நபர் ஒருவரை சாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசி காயம் ஏற்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றவாளியான இசக்கிமுத்து மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ஹேமா நேற்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.
தண்டனை விபரம் பின்வருமாறு:
IPC 324 r/w 3(2)(va) SC/ST ACT-ன்படி 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம், 3(1)(r) SC/ST ACT-ன்படி 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம், 3(1)(s) SC/ST ACT-ன்படி 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், மேற்சொன்ன தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், ராதாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த பெண் தலைமை காவலர் சீதாலெட்சுமி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் கந்தசாமி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.