“எம்.ஜி.ஆரைப் போலவே விஜய்யின் தலைமையும்..” - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்

இனி தமிழகம் விஜய்யின் கையில்தான் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
“எம்.ஜி.ஆரைப் போலவே விஜய்யின் தலைமையும்..” - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்
Published on

கரூர்,

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்துபோனார்கள். இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று கரூர் வந்தார். இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையும் இன்று நடைபெற்றது. அவர்களுக்கு தற்காலிக பணி வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கரூரில் உள்ள அட்லஸ் அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு காரில் வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தளபதி விஜய் பின்னால்

அந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

கடந்த திமுக ஆட்சியில் நிலவிய பொருளாதார நெருக்கடி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட சவால்களை தூள்தூளாக நொறுக்கி, தமிழகத்தில் ஒரு பாதுகாப்பான தூய ஆட்சியை வழங்கக்கூடிய தளபதி விஜய் பின்னால், நானும் அதிமுக தொண்டர்களும் இணையத் தொடங்கிவிட்டோம்.

கனவா? இல்லை நனவா?

நாங்கள் கட்சியில் இணைந்த அடுத்த நாள் முதல்வருடன் 2 மணிநேரம் சந்திப்பு நடந்தது. உடம்பெல்லாம் சிலிர்க்கும்படி அந்த நிகழ்வு இருந்தது. என் மேல் கை போடும்படி ஒரு போட்டோ வேண்டும் என்று கேட்டேன். உடனே அதை எடுத்து கொடுத்தார். கனவா நனவா என்றே தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் பாதை விஜய் பயணம்

எம்ஜிஆரைப் போலவே விஜய்யின் தலைமையையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும், இனி தமிழகம் விஜய்யின் கையில்தான் இருக்கும். புரட்சி தலைவரின் அன்பு, புரட்சி தலைவியின் வீர‌ம் கொண்டவர் விஜய். இந்தியாவே திரும்பி பார்க்கும் வரலாறு படைத்தவர் CM விஜய். பணம் இருந்தால் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற மன கோட்டையை உடைத்த‌வர்.

இனி உங்கள் காலம்

அரசியல் தெரியுமா என விமர்சிக்கப்பட்ட எம்ஜிஆர் இறுதிவரை முதல்-அமைச்சராக இருந்தார். இனிமேல் தமிழகத்தில் தளபதி ஆட்சிதான்.

பெண்கள் சுதந்திரமாக நடமாடும் ஆட்சியை தந்த உங்கள் பின்னால் கரூர் அதிமுக தொண்டர்கள் புறப்பட்டு விட்டார்கள், எங்க கட்சிக்கு வந்துவிட்டீர்களா தாத்தா என 3 வயது சிறுவன் என்னிடம் கேட்கிறான்.. இனி உங்கள் காலம். தமிழகத்தில் இனிமேல் நிரந்தரமாக விஜய்தான் ஆட்சியமைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முதல்-அமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் ஒன்றை எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com