

தர்மபுரி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 19 வயது மாணவர்களுக்கான சூப்பர் சீனியர் பிரிவு கால்பந்து போட்டியில் கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இந்த சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, உடற்கல்வி ஆசிரியை கல்பனா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.