கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணி: மு.க.ஸ்டாலின் ஆய்வு


கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணி: மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமான பணிகள் முடிவுற்று மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 2.6.2023 அன்று நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு விழாவில், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தலைவர் கலைஞர் பெயரால், சென்னையில் புதிய உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 90,384 சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அரங்கம், 5,000 நபர்கள் அமரக்கூடிய அளவில் 58,104 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம், 1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 5,12,800 சதுர அடி மொத்த பரப்பளவில் கட்டப்பட்டுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்-அமைச்சர் 29.5.2025 அன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் முழுவதும் குளிரூட்டும் வசதி மற்றும் மின் ஆக்கி வசதி, மின்தூக்கி வசதி, 1,638 சீருந்துகள் மற்றும் 1,700 இருச்சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது பொருட்காட்சி அரங்கம், மாநாட்டு மண்டபம் மற்றும் கலையரங்கத்தின் பார்வையாளர் மாடம், மேடைகள் அமைக்கும் பணிகள் முடிவுற்று மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்துடன் வெளிப்புற பணிகளான சுற்றுச்சுவர், அணுகு சாலைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் மின்விளக்கு வசதிகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2026 நவம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை தரமாகவும், விரைவாகவும், குறித்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

1 More update

Next Story