கள்ளக்கடல் நிகழ்வு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரியில் கள்ளக்கடல் நிகழ்வால் 1.9 முதல் 2.1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புகின்றன.
கள்ளக்கடல் நிகழ்வு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on

கன்னியாகுமரி,

தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்கடல் என்றால் என்ன?

'கள்ளக்கடல்' என்பது திடீரென கரைக்கு வரும் கடல் அலைகளை குறிக்கிறது. சாதாரணமாக கடல் அலைகள் காற்றால் அருகிலேயே உருவாகும். ஆனால் கள்ளக்கடல் அப்படி இல்லை, நம்மிடம் இருந்து 5,000 முதல் 10,000 கி.மீ. தொலைவில், அண்டார்டிகாவில் தென் பெருங்கடலில், பெரும்புயல் அல்லது குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அந்த நீண்ட அலைகள், காற்று இல்லாமலேயே சக்தியை இழக்காமல் பல நாட்கள் பயணித்து இந்திய கடற்கரைக்கு வரும்.

இந்த அலைகளின் இடைவெளி 18 முதல் 22 வினாடிகள் இருக்கும். சாதாரண அலைகளின் இடைவெளி 8 முதல் 10 வினாடிகள் தான். இந்த கள்ளக்கடல் உருவாகும் போது, கடல் பார்க்க அமைதியாக இருக்கும். வானிலை நன்றாக இருக்கும். எந்த மழையும், காற்றும் இருக்காது. திடீரென ஒரு பெரிய அலை வந்து கரையை தாண்டி, சாலை, வீடுகளுக்குள் புகுந்துவிடும். அதனால் தான் இதற்கு கள்ளக்கடல் என்று பெயர் வைத்தனர்.

படகுகளை உடைத்துவிடும்

முன் அறிவிப்பு இல்லாமல் வருவது போல தெரியும். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது உள்ளே இழுத்துச் சென்றுவிடும். கரையில் நிற்கும் படகுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்து உடைத்துவிடும். கடல் ஏற்ற நேரத்துடன் சேர்ந்தால், கடல் நீர் ஊருக்குள் புகுந்து வெள்ளம் வரும். இதற்கு முன்பு கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரி, கோள கடற்கரையில் இதேபோல கள்ளக்கடல் வந்து பல வீடுகள், படகுகள் சேதமானது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் சிறு படகுகள் செல்ல வேண்டாம் என்றும், கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை இடைவெளி விட்டு நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரை சுற்றுலா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கள்ளக்கடல் நிகழ்வால் 1.9 முதல் 2.1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்புகின்றன. காற்றின் வேகம் அதிகரிப்பால் அலைகள் வேகமாக எழுகின்றன. கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com