கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com