

மதுரை,
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாப்பாக்குடி ஊராட்சி மேற்கு தெருவில் ரூ.15 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்கள் கூட்டணியை பலம் பொருந்திய கூட்டணி என்கிறார். அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் டார்ச் லைட்டை வீசி டி.வி.யை உடைத்தார். ஊழல் அரசியலை ஒழிப்பேன், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று பேசினார். உலகநாயகன் தற்போது நகைச்சுவை நாயகனாக மாறிவிட்டார்.
தி.மு.க. கூட்டணி பலமான கூட்டணி கிடையாது. அங்கு பில்டிங் ஸ்டிராங், அஸ்திவாரம் வீக். எங்கள் கூட்டணியில் உண்மையான உலகநாயகன் பிரதமர் மோடிதான். தமிழ்மொழியை உலக அளவில் கொண்டு சேர்த்து இருக்கிறார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன். தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி கொடுத்து உள்ளேன் என்று மோடி கூறுகிறார். அது குறித்து தி.மு.க.வினர் பேச முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.