பெரியார் சிலை குறித்து பேசிய கனல் கண்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - மாவட்ட கோர்ட்டு உத்தரவு

பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய கனல் கண்ணன் முன்ஜாமீன் மனுவை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பெரியார் சிலை குறித்து பேசிய கனல் கண்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - மாவட்ட கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை மதுரவாயலில் நடந்த ஒரு கூட்டத்தில் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், "ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்" என்ற பேசினார். இதையடுத்து, அவருக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கனல் கண்ணன், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், "சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை. சிலையை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைதான் விடுக்கப்பட்டது. மனுதாரர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை" என்று வாதிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜி.தேவராஜன் வாதிட்டார். "மனுதாரர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மோதலை உருவாக்கும் விதமாக மதங்களை பற்றியும் பேசியுள்ளார்.

அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிட்டார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com