

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சுங்குவார்சத்திரம் மற்றும் திருப்பெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் இன்று (25.06.2026) காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சுங்குவார்சத்திரம் மற்றும் திருப்பெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பத்திரப்பதிவுத்துறைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்காள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சுங்குவார் சத்திரம் மற்றும் திருப்பெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலங்களில் பத்திரப் பதிவு மேற்கொள்ளும் போது பணம் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பத்திரப் பதிவிற்காக தேங்கிய கோப்புகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அலுவலர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுமக்களிடமிருந்து பத்திரப்பதிவிற்காக வழங்கப்பட்ட கோப்புகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பத்திரப்பதிவு நடவடிக்கைகளை எளிமையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.