

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவியை கனிமொழி எம்.பி. நேற்று வழங்கினார்.
6 பேர்
தூத்துக்குடி அருகே உள்ள சிலுவைப்பட்டியை சேர்ந்தவர்கள் பூண்டி மாதா கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஆன்மிக சுற்றுலா சென்றனர். அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது, 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 6 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தும், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
ரூ.3 லட்சம்
இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி, ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.