

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் அய்யம்பாளையம் ஆதிபராசக்தி பக்தர்கள் குழு சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அய்யம்பாளையத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து யாகவேள்வி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கஞ்சி கலய ஊர்வலம் தொடங்கியது. அய்யம்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்றது. அப்போது கஞ்சி கலயத்தையும், முளைப்பாரியையும் தலையில் சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். முடிவில் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யம்பாளையம் ஆதிபராசக்தி பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.