கன்னியாகுமரி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் உலகப்புகழ் பெற்ற தூக்கத் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
Published on

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் உலகப்புகழ் பெற்ற தூக்கத் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், அன்றைய தினம் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும்.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, பிரிவு 12(2)-ன் கீழ் மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, திருவிழா நடைபெறும் கொல்லங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மார்ச் 22, 2026 அன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 22-ம் தேதி அன்று நித்திரவிளை, கொல்லங்கோடு, நடைக்காவு, ஊரம்பு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் கொல்லங்கோட்டில் இயங்கி வரும் 'ஹோட்டல் ஒயாசிஸ் இன்டர்நேஷனல்' மதுபான பார் ஆகியவற்றை முழுமையாக அடைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com