கன்னியாகுமரி: பெண்கள், வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த கும்பல் கைது - 27 சவரன் நகைகள் மீட்பு

பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையிலான போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல வருடமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விஜயா, மஞ்சு, அரவிந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் வயதான பெண்களை குறி வைத்து பர்ஸ், செயின் ஆகியவைகளை திருடி வந்தது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போக்சோ குறித்து விழிப்புணர்வு செய்ய தனி காவலர்களை நியமித்தது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.






