கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதி

4 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கண்ணாடி நடைபாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கண்ணாடி நடை பாலத்தில் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கடந்த 15-ந் தேதி தொடங்கினர்.
இதனால் பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த பராமரிப்பு பணிகள் கடந்த 4 நாட்களாக நடந்து வந்தது. அந்த நாட்களில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கண்ணாடி நடைபால பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்தது. அதன்படி 4 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கண்ணாடி நடைபாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதனைதொடர்ந்து கன்னியாகுமரிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட அவர்கள் கண்ணாடி நடைபாலத்தின் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை கண்டுகளித்தனர்.






