கன்னியாகுமரி: வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.
கன்னியாகுமரி: வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
Published on

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்துசூடன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பிறகு சோதனையிட்டதில் அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் மார்த்தாண்டம் அருகே செட்டிச்சார்விளையை சேர்ந்த ரவீந்திரன் மகன் சுபாஷ் கிருஷ்ணன் (வயது 27) என்பதும், பெயிண்டராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சுபாஷ் கிருஷ்ணன் வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு மாடியில் அவர் ஏராளமான செடிகளை வளர்த்து வந்துள்ளார். அதில் ஒரு பூந்தொட்டியில் கஞ்சா செடி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com