காரைக்கால்: விஷம் கொடுத்து கொல்லப்பட்ட மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு...!

காரைக்காலில் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட மாணவனின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காரைக்கால்: விஷம் கொடுத்து கொல்லப்பட்ட மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு...!
Published on

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், ரேஷன்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு பால மணிகண்டன்(வயது 13) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பாலமணிகண்டன், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளியில் ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பாலமணிகண்டன் நேற்றுமுன்தினம் மதியம் வீட்டுக்கு வந்துள்ளான். சிறிது நேரத்தில் பாலமணிகண்டன் திடீரென வாந்தி எடுத்துள்ளான். இதனையடுத்து மாலதி தனது மகனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மாணவனிடம் குடித்த குளிர்பானத்தை அவனது தாய் கொடுத்ததாக பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த, மாலதி தனது கணவர் ராஜேந்திரனுடன் பள்ளிக்கு சென்று பள்ளி காவலாளியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில், பள்ளி நிர்வாகத்தினர், காவலாளியை அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது அதே பள்ளியில் பாலமணிகண்டன் வகுப்பில் பயிலும் சக மாணவி ஒருவரின் தாயார், காவலாளி தேவதாசிடம் குளிர்பானம் கொடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகன் பாலமணிகண்டன் கல்வி மற்றும் இதர கலைகளில் சிறந்து விளங்குவதால், இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்.

இதனிடையே விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான். ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கினர். மேலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரைக்கால் ஆட்சியர் முகமது மன்சூர் உறுதியளித்தார்.

இதனையடுத்து மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட காரைக்கால் பள்ளி மாணவனின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவனின் உடலுக்கு ஜிப்மர் மருத்துவ குழு பிரேத பரிசோதனை மேற்கொண்டது.

மாணவனின் உடலானது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த கொண்டு செல்லப்படுகிறது. மாலை 4 மணியளவில் மாணவனின் உடலானது காரைக்கால் முல்லை நகர் பகுதியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com