கரூர்: விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜோதிமணி எம்பி கோரிக்கை

சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் என அனைத்தும் ஒரே சாலையைப் பயன்படுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கரூர்: விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஜோதிமணி எம்பி கோரிக்கை
Published on

சென்னை,

கருரில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்களை சந்தித்து, கரூர் நாடாளுமன்றத் தொகுதி தொடர்பாக பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தேன்.

முதலாவதாக, கரூர் நகருக்கு சுற்றுவட்டப் பாதை (Ring Road) அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினேன். திருச்சி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தற்போது கரூர் நகரின் மையப்பகுதி வழியாகவே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், கரூர் ஜவுளி மற்றும் ஏற்றுமதித் தொழிலின் முக்கிய மையமாக இருப்பதால், தொழிற்சாலை வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் என அனைத்தும் ஒரே சாலையைப் பயன்படுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

நிதி ஒதுக்கீடு

கரூர் சுற்றுவட்டப் பாதையின் முதல் கட்டப் பணிகளுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கட்டப் பணிகளுக்கும் ரூ.535 கோடி விரைவாக நிதி ஒதுக்கி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். உடனடியாக துறை சார்ந்த அதிகாரியை அழைத்து இந்த ஆண்டிலேயே நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அறிவுறுத்தினார். பல வருடங்களாக முடங்கிக் கிடக்கும் இப்பணி இவ்வளவு சீக்கிரம் வேகமெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

உடனடியாகப் பரிசீலனை

மேலும், கரூர் மாவட்டத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், விராலிமலையில் ஒரு ஸ்டேடியம் மற்றும் மணப்பாறை மற்றும் வேடசந்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைத்து ,தேவையான விளையாட்டு உபகரணஙகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டேன்.

உடனடியாகப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அவரது அதி விரைவான,சுறுசுறுப்பான பணியினைப் பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com