கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு பணி ரத்து!

அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு பணி ரத்து!
Published on

மதுரை,

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

31 பேருக்கு அரசு வேலை

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.

பொதுநல வழக்கு தாக்கல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன், நாம் தமிழகர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிளிட்டஸ் மற்றும் அரசு வேலைக்கு படித்து வரும் ஒருவர் என 3 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு 10 லட்சம் ரூபாயும், த.வெ.க. சார்பில் 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விசாரணையில் தலையீடு

கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசியல் கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் உள்ள போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையில் தலையிடுவதைப் போல உள்ளதாகவும், இது சாட்சியத்தை மாற்றிக் கொடுக்க நிர்பந்திக்கும் வகையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை ரத்து

இந்த நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கியதற்கான வழக்கு விசாரணை ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் கேள்வி

மேலும் "ஏன் சுயத்தொழில் முனைவோராக மாற்றக்கூடாது? திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க இயலாது. தினந்தோறும் சாலை விபத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர்.

அவர்களுக்கெல்லாம் அரசு வேலை வழங்க முடியுமா? அரசு விதிகளை மீறி கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com