கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குளச்சல் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
Published on

குளச்சல், 

குளச்சல் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்பிடி துறைமுகம்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்த தங்குதளமாக கொண்டு சுமார் 300 விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி இருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். இவர்களின் வலைகளில் கேரை, கணவாய், இறால், புல்லன், கிளிமீன்கள், செம்மீன் போன்ற உயர் ரக மீன்கள் சிக்கி இருக்கும். வள்ளம் மற்றும் கட்டுமர மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரைக்கு திரும்புவார்கள்.

தற்போது மீனவர்கள் வலையில் கணவாய், நாக்கண்டம் போன்ற மீன்கள் கிடைத்து வருகிறது.

கடலுக்கு செல்லவில்லை

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் குளச்சல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் 9 மணி வரை மழை நீடித்தது. அத்துடன் கடற்கரை பகுதியில் மேக மூட்டமாக இருந்தது.

இதனால் நேற்று வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஒரு சில கட்டுமர மீனவர்களே மீன்பிடிக்க சென்றன. அவர்களின் வலையில் குறைவான மீன்களே கிடைத்தன. இதனால் நேற்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது. இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றிருந்த 7 விசைப்படகுகள் நேற்று காலையில் கரை திரும்பின. அவற்றில் குறைவான அளவு கணவாய் மீன்களே இருந்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com