முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி

கேரள வனத்துறை கட்டுமான பொருட்களை குமுளி வழியாக முல்லைப்பெரியாறு அணை நோக்கி கொண்டு சென்றனர்.
முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி
Published on

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் சார்பில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் ஆண்டுதோறும் மராமத்து பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில் பொதுப்பணித்துறையின் சார்பில் கடந்த 4-ந்தேதி, தேனியில் இருந்து 2 தனியார் லாரிகளில் தளவாடப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இடுக்கி மாவட்டம், குமுளி தாலுகா வல்லக்கடவு வழியாக முல்லைப்பெரியாறு அணை நோக்கி கொண்டு சென்றனர்.

சோதனை சாவடியில் முல்லைப்பெரியாறு அணைக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல கேரள வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டரால், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், கேரள அரசின் மூலம் வல்லக்கடவு சோதனைச்சாவடி மற்றும் தேக்கடி படகு இறங்கு தளம் வழியாக முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com