நின்று கொண்டிருந்த லாரி மீது கியாஸ் டேங்கர் லாரி மோதல்: டிரைவர் சாவு

கரூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கியாஸ் டேங்கர் லாரி மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
நின்று கொண்டிருந்த லாரி மீது கியாஸ் டேங்கர் லாரி மோதல்: டிரைவர் சாவு
Published on

லாரி மோதியது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 34). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து கியாஸ் நிரப்பப்பட்ட லாரியை மதுரைக்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அதிகாலையில் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தேரப்பாடி பிரிவு சாலையில் அந்த லாரி வந்து கொண்டிருந்தது.அப்போது அதே சாலையில் பருப்பு லோடுடன் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, கியாஸ் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, பருப்பு லோடுடன் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.

டிரைவர் பலி

இதில் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com