கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாட்டி வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

பாலியல் பலாத்காரம்

அரியலூர் மாவட்டம் மேலநெடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். டிரைவரான இவர் அதே பகுதியில் பாட்டி வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவியை (வயது 17) ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு வந்த மாணவியை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கின் விசாரணையானது அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சிறை தண்டனை

விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், விஜயகுமாருக்கு மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து இதனை ஏககாலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ராஜா ஆஜராகி வாதாடினார். குற்றவாளி விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மேலும் அவரது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com