

சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி முதல் கட்டத்தில் சென்னை சென்ட்ரல்-விமான நிலையம், சென்னை சென்ட்ரல்-விம்கோ நகர் என 2 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதே போல் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சிறுசேரி சிப்கார்ட், மாதவரம்-சோலிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சென்னை மெட்ரோ முதலாம் கட்ட திட்டமான சென்ட்ரல்-விமான நிலையம் வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்டத்தின் சென்ட்ரல்-விமான நிலைய வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கான திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கக்கூடிய நிலையில், இதனை மேலும் செங்கல்பட்டு வரை நீட்டிப்பதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டிருக்கிறது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் பட்சத்தில், அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக சென்னை மெட்ரோல் நிறுவனம் கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.