கோடநாடு வழக்கு விவகாரம்: ஈ.பி.எஸ் கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை..சென்னை ஐகோர்ட்

சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
கோடநாடு வழக்கு விவகாரம்: ஈ.பி.எஸ் கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை..சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை,

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை ஏற்ற ஐகோர்ட் , நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சாமுவேல் மேத்யூ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எதனடிப்படையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விலக்கு கோரப்பட்டதாக தெரிவித்தார். உடல் நிலை காரணத்தை தவிர மற்ற காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் கூறினர்.

இதனையடுத்து, இது குறித்து விரிவாக வாதிட அனுமதிக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும்15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com