கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைஏப்ரல் மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ந் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைஏப்ரல் மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ந் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்

இந்த வழக்கை பொறுத்தவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட, 10 பேர் தவிர, வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி விவேக், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, தனிப்படை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையான தனிப்படையினர், சீல் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையை ஊட்டி மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இதற்கு இடையே இந்த வழக்கு விசாரணை நேற்று ஊட்டி ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டு வளாகத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும், சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூடுதல் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜராகினர்.

அப்போது சாட்சிகள் சம்பந்தமாக புலன் விசாரணை மேற்கொள்ளவும் தொழில்நுட்ப விஷயங்களுக்காகவும் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com