

சென்னை,
தி.மு.க. விவசாய அணி செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். நாமக்கல் மாவட்ட தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்தார். இந்த நிலையில், சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் அதிக ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.பி.ராமலிங்கம் கட்சி தலைமையின் கருத்தை மீறி, மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லாதது என தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து தி.மு.க. தலைமைக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து விவசாய அணி மாநில செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் கே.பி.ராமலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், தி.மு.க.வில் இருந்து கே.பி. ராமலிங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பினை மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.