

கிருஷ்ணகிரி
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை விழா முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.ற்போது கொரோனா நோய் பரவாமல் தடுக்க 2-வது ஆண்டாக விழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் நேற்று அதிகாலை 4 மணியளவில், கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், ஜெகதேவி பாலமுருகன் கோவில், சந்தூர் மாங்கனி மலை வேல்முருகன் கோவில், பர்கூர் பாலமுருகன் கோவில், எட்ரப்பள்ளி முருகன் மற்றும் ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதற்காக சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் உட்பட 4 நபர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கிரேன் வாகனத்தில் தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு 40 அடி உயரத்தில் முருகன் கோவிலை நோக்கி அந்தரத்தில் தொங்கியவாறு பம்பை முழக்கங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.
மேட்டுப்பாளையம் பகுதியை அவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக நிலைதடுமாறி கிரேனிலிருந்து ஆகாஷ் மட்டும் அப்படியே கீழே விழுந்தார். தான் கீழே விழுவதை உணர்ந்துகொண்ட ஆகாஷ் தண்ணீரில் குதிப்பது போல் தரையில் குதித்தார். இதனால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிகழ்வையடுத்து நேர்த்திக்கடன் செலுத்த கிரேனில் சென்ற மற்ற மூவரும் கீழே இறங்கி நடந்து சென்று கோவிலில் சாமி தரிசனம் சென்று வீடு திரும்பினர்.
இதன் வீடியோ காட்சி வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடிக்கிருத்திகை ஆடி 18 விழா கொண்டாட அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி நேர்த்திக்கடன் செலுத்த சென்று விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.