கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் மழை பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆய்வு

ஊத்தங்கரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில் மழை பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆய்வு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே பரசன் ஏரி உள்ளது. அந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பஸ் ஸ்டாண்டிற்குள் வெள்ளம் சூழ்ந்தது. ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீர், பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்துச் சென்றது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 503 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், மழையால் கடும் பாதிப்பை சந்தித்த ஊத்தங்கரையில் மழை பாதிப்புகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

ஊத்தங்கரையில் 50 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழையால் 50 வாகனங்கள் பள்ளத்தில் விழுந்துள்ளன. ஏரியை ஒட்டிய 55 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் சேதமடைந்த வாகனங்களை சீரமைக்க அரசு உதவி செய்ய வேண்டும். ஊத்தங்கரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும். ஊத்தங்கரை ஏரியின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com