

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் ராயப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் சார்லஸ் சாம்ராஜ்துரை தனது போலீஸ் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாநகர பஸ் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்தவர்கள், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். பஸ் டிரைவர் குடிபோதையில் உள்ளார் என்றும் பயணிகள் கூச்சல் போட்டனர். உடனே சுதாரித்த உதவி கமிஷனர் சார்லஸ், தனது ஜீப்பில் பஸ்சை விரட்டிச்சென்று மடக்கினார்.
பஸ் டிரைவர் குடிபோதையில் பஸ்சை ஓட்டியது தெரிய வந்தது. அவர் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். வேறு பஸ்சை வரவழைத்த உதவி கமிஷனர் சார்லஸ், அதில் பயணிகளை பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தார். காப்பாற்றப்பட்ட பயணிகள், சார்லசுக்கு நன்றி தெரிவித்து விட்டு சென்றனர். உதவி கமிஷனர் சார்லசின் மெச்சத்தகுந்த இந்த பணியை பாராட்டி, போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பரிசு வழங்கினார்.
இதேபோல சாலையில் கேட்பாரற்று கிடந்த 2 பவுன் தங்க கைச்சங்கிலியை போலீசில் நேர்மையாக ஒப்படைத்த மோகன் என்பவருக்கும், கமிஷனர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.