குலசை தசரா திருவிழா: கடைகளில் விற்பனைக்கு குவிந்த வேடப்பொருட்கள்

விரதம் இருக்கும் பக்தர்கள் கோவில்களில் பிறை அமைத்து தங்கியிருந்து வழிபடுகின்றனர்.
குலசை தசரா திருவிழா: கடைகளில் விற்பனைக்கு குவிந்த வேடப்பொருட்கள்
Published on

குலசேகரன்பட்டினம்,

தசரா திருவிழா

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10-ம் திருநாளான 20-ந்தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவார்கள்.

காளி வேடம் அணியும் பக்தர்கள் 61 நாட்கள், 41 நாட்கள், 21 நாட்கள், 11 நாட்கள் என பல்வேறு நாட்கள் விரதம் கடைபிடிக்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி, துளசிமாலை வாங்கி, கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். பல்வேறு ஊர்களிலும் விரதம் இருக்கும் பக்தர்கள் அங்குள்ள கோவில்களில் பிறை அமைத்து தங்கியிருந்து வழிபடுகின்றனர்.

வேடப்பொருட்கள்

குலசேகரன்பட்டினம் கோவிலில் கொடியேற்றத்துக்கு பின்னர், விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி வேடம் அணிகின்றனர். தசரா விழாவை முன்னிட்டு, உடன்குடி பஜாரில் உள்ள கடைகளில், பக்தர்கள் அணியும் அலங்கார வேடப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நெல்லை டவுனில் உள்ள கடைகளிலும் தசரா வேடப்பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

காளி வேடம் அணியும் பக்தர்கள் நீண்ட சடைமுடி, கிரீடம், சூலாயுதம், கண்மலர் போன்றவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் சிவன், பார்வதி, விநாயகர், முருகபெருமான், அனுமர், நாராயணர், ராமர், லட்சுமணர் போன்ற வேடம் அணியும் பக்தர்களும் வேடப்பொருட்களை வாங்கி செல்கின்றனர். சிலர் தங்களுக்கு ஏற்ற வேடப்பொருட்களை செய்து தருமாறு ஆர்டர் கொடுத்து செல்கின்றனர். காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு வேடப்பொருட்கள் மொத்தமாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com