

குலசேகரன்பட்டினம்,
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின்பாது, வேடம் அணியும் பக்தர்கள் இரும்பாலான ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 20-ந்தேதி சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் நடக்கிறது.
இந்நிலையில், தசரா குழுக்கள் திருவிழா நாட்களில் கடைபிடிக்கும் முறைகள் குறித்தும், பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்படும் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை கூட்டம், கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் கவுதமன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிவலூர், கொட்டங்காடு, சந்தையடியூர், சோமநாதபுரம், கரிசல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் கவுதமன் பேசுகையில், "கடந்த ஆண்டை விட கூடுதலாக கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள், வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் வேடம் அணியும் பக்தர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள், சாதி அடையாளம் கொண்ட கொடிகள் கொண்டு வரக்கூடாது. இவ்வாறு கொண்டு வரும் தசரா குழுவினர் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அக்டோபர் 21-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பேசுகையில், "பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, கடந்த ஆண்டை விட கூடுதலாக இந்த ஆண்டு 250 ஏக்கர் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. பாதுகாப்பு பணியில் 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள் என 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கருங்காளி அம்மன் கோவில் அருகில் சிறிய நடைபாலம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 3 மாவட்ட எல்லையிலும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.
போலீஸ் வேடம் அணியும் பக்தர்கள் கண்டிப்பாக முகத்தில் பவுடர் பூச வேண்டும். சாதி அடையாள கொடி, பனியன் போன்றவற்றை கோவிலுக்கு கொண்டு வரக்கூடாது. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்டும்" என்று தெரிவித்தார்.