குலசேகரன்பட்டினம்: கடல் அலையில் சிக்கிய வாலிபர் சாவு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி சந்தையடி, பண்டாரவிளையைச் சேர்ந்த ஒரு வாலிபர், தனது நண்பர்களுடன் மணப்பாடு கடலில் குளிக்க சென்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி சந்தையடி, பண்டாரவிளை தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் ராஜாமணி (வயது 20). இவர் நேற்று மதியம் நண்பர்களுடன் மணப்பாடு கடலில் குளிக்க சென்றுள்ளார். பின் நண்பர்களுடன் தூண்டில் பாலம் பகுதியில் செல்பி எடுப்பதற்காக ராஜாமணி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் கடலுக்குள் இறங்கியுள்ளனர்.
அப்போது கடலில் ராட்சத அலை எழும்பிய நிலையில் 3 பேரும் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் மூழ்கினர். இதில் ராஜாமணி தவிர மற்ற 2 பேரும் உயிர் தப்பினர். ராஜாமணியை கடலுக்குள் தேடும் பணி நடந்தது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில அவரது உடல் மனப்பாடு தூண்டில் பாலம் அருகில் நேற்று மதியம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.






