வெளுத்து வாங்கும் கனமழையால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; பல கிராமங்கள் இருளில் மூழ்கின

குமரியில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். பல கிராமங்கள் இருளில் மூழ்கின.
வெளுத்து வாங்கும் கனமழையால் குமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; பல கிராமங்கள் இருளில் மூழ்கின
Published on

நாகர்கோவில்,

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் சின்னத்தால் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடை, இடையே அடைமழையும் பெய்து வெளுத்து வாங்குகிறது. அதோடு மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால், மின்தடை ஏற்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மார்த்தாண்டம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. நேற்று காலையிலும் மழை நீடித்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி தொடர்ந்து வெள்ளம் பாய்கிறது. எனவே, சப்பாத்து பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதித்து கம்பியால் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாகி உள்ளன.

மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை-திக்குறிச்சி சாலையில் மழை வெள்ளம் தேங்கியதால், வள்ளக்கடவு பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க மணல் மூடைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தினர். ஆனாலும் சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கனமழையால் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் நெல்லை, தென்காசியில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com